கொடைக்கானல், பிப்.10:
கொடைக்கானலில் குழந்தை வேலப்பர் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது. கொடைக்கானல் அருகே பூம்பாறையில் அமைந்துள்ள குழந்தை வேலப்பர் கோவில் பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலுக்கு சொந்தமானது. இந்த பழமையான குழந்தை வேலப்பர் கோவில் திருவிழா கொடியேறறத்துடன் கடந்த மாதம் 30ம் தேதி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 7−ந் தேதி வரை திருவிழா நடைபெற்றது.
ஒவ்வொரு நாளும் அருள்மிகு குழந்தை வேலப்பர் சேவல், ஆட்டு கிடா, மயில், சிங்க வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதனைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நாளான தேர் பவனி நேற்று நடைபெற்றது.
இதில் குழந்தை வேலப்பருக்கு பல்வேறு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து தேரோட்டம் கோயிலைச் சுற்றி நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் அங்கபிரதசனம், காவடி, பறவைக் காவடி எடுத்தல் போன்ற நேர்த்திக் கடன்களை செய்தனர்.
இந்த விழாவில் கொடைக்கானல் மலைப் பகுதிகள் மட்டுமல்லாமல் திண்டுக்கல், தேனி, மதுரை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழாவை ஏற்பாடுகளை பழனியாண்டவர் கோயில் நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு பணியில் டி.எஸ்.பி. ஆத்மநாதன் தலைமையில் 100 க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டிருந்தனர். சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதோடு அன்னதானமும் வழங்கப்பட்டது.