கோவை,
ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழாவுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலில் சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து கடத்தி வருவதாக ரெயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி.எப்.) போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அதிகாரிகள் உஷார் படுத்தப்பட்டனர். தொடர்ந்து இன்று காலை 8.15 மணியளவில் கோவை வந்த ரெயிலில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் சோதனை செய்தனர். அப்போது ரெயிலில் உள்ள டி-3 என்ற பெட்டியில் 1-ம் நம்பர் சீட்டுக்கு அடியில் கஞ்சா பொட்டலங்கள் கேட்பாரற்று இருப்பதை போலீசார் பார்த்தனர்.
பின்னர் 7 கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றினர். இவற்றின் மொத்த எடை 7 கிலோ ஆகும். விசாரணையில், ரெயிலில் பயணம் செய்த யாரோ மர்ம நபர் வடமாநிலத்தில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா பொட்டலங்களை கடத்திச் சென்றது தெரியவந்தது.
போலீசார் சோதனை செய்ய வருவதை அறிந்த அவர்கள் கஞ்சா பொட்டலங்களை போட்டு சென்றதும் தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 1 லட்சத்து 40 ஆயிரம் இருக்கும் என்று ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தெரிவித்தனர்